Dec 11, 2007

என்னை கவர்ந்த கவிதைகள்

நீ எனக்கு வேண்டாமடி


பொதுவா பாத்திங்கன்னா பசங்க எழுதுற கவிதை எல்லாம் காதலிக்காக உருகி உயிரை விடுகிற மாதிரி தான் இருக்கும். ஆனா இங்க ஒரு முகம்/பெயர் தெரியாத கவிஞர் ரொம்ப அழகா காதலியை விட குடும்பம் தான் பெரியது அப்படின்னு சொல்லி இருக்கிறார். ரொம்ப நல்ல அழகான கவிதை.


சைனாவுக்கு
போக வேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை
என்னை பக்கத்து தெருவுக்கு கூட
பைக்கில் போகச்சொல்கிறார்!

அவரை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது?

தேர்வு சமயங்களில்
இரவெல்லாம்
படித்துக்கொண்டிருப்பதோ நான்
விழித்துக்கொண்டிருப்பதோ என் தாய்!

அவளை விட்டுவிட்டா உன்னோடு ஓடி வருவது?

ஆபிசுக்கு செல்லும் அண்ணனின்
அயர்ன் செய்த சட்டையை
வெட்டியாய் ஊர் சுற்றும்
நான் அணிந்து கொண்டாலும்
கோப்ப்படாமல் ஆனந்தப்படுவானே!

அவனை விட்டுவிட்டா உன்னோடு ஓடி வருவது?

நான் பாக்கெட் மணி
கேட்கும்போதெல்லாம் - தான்
நகை வாங்கவைத்திருக்கும் பணத்தை
புன்னைகையோடு தருவாளே என் தங்கை

அவளை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது?

கோபத்தில் தம்பியை அடித்துவிட
அது அப்பா வரும் நேரம் என்பதால்
என்னை காட்டிக்க்கொடுக்காமல்
அழுகையை அடக்கிக்கொள்வானே

அவனை விட்டு விட்டா உன்னோடு ஓடிவருவது?

இப்படி எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்கலிருக்க
என்ன அழ வைக்கும் நீ எனக்கு வேண்டாமடி!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள்


வல்லாண்மை

பயங்கரவாதி
என்கிறான்
துப்பாக்கி
வைத்திருப்பவனை
அணுகுண்டு
வைத்திருப்பவன்!


தமிழன்

களத்தில்
இருந்த
வில்
இசைக் கருவியாய்.....

வேல்
சாமியாய்......

குதிரை
விளையாட்டாய்....

தமிழன்
அடிமையாய்!


போராளி


செத்தவனுக்காக
அழுதவன்
நீ

இவன்
அழுதவனுக்காக
செத்தவன்!


ஒருமை

சட்டம்
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி

சட்டம்
கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி!


மண்


மண்ணில்
உழவன் வாழ்க்கை..
அறுவடைக்கு முன்

உழவன் வாழ்க்கையில்
மண்!
அறுவடைக்குப்
பின்...


குமுறல்

செருப்பு
ஆண்ட நாள்
அது
என்கிறாய்...

சொல்
செருப்பைச்
செய்தவன்
ஆளும் நாள்
எது?


இயக்கம்

வைக்காதே சிலை
தொழிலாளிக்கு...

எங்கும்
செயலற்று
நின்றதில்லை
இவன்
என்றும்!


கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகளில் எப்போதுமே தமிழ் இனத்தின் பற்று மேலோங்கியே இருக்கும். இவருடைய "ஆண்ட பரம்பரை இண்ணொரு முறை ஆழ நினைப்பதில் என்ன குறை" என்ற கவிதையை படித்ததுமே இவரின் பிற கவிதைகளையும் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. நல்ல கவிஞர். மேலும் நிறைய படைப்புகளை உருவாக்க வாழ்த்துகிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முதல்முறையா படித்ததுமே ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டது. என்ன ஒரு ஆழமான அழகிய கற்பனை!


சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

கவிஞர் பிரமிள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

1 comment:

இராஜேஷ் இராமசாமி | Rajesh Ramasamy said...

டியர் ஆனந்தன்,
மிகவும் யதார்த்தமான கவிதை. பல சமயங்களில் காதல் எவையெல்லாம் ஒருவனை மறக்கடிக்க செய்துவிடுகிறது என்பதை எண்ணும்போது பரிதாபமாக இருகிறது. கைவிடப்படும் தருணங்களும் உறவுகளும் காதலைவிட உயர்வாக இருக்கும் பட்சத்தில், காதலை கைவிடுவதில் தவறே இல்லை.

கவிதை புனைந்தவரை அடையாளம் காட்டியிந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இராஜேஸ் இராமசாமி